செவ்வாய், 11 அக்டோபர், 2011

அல்குர் ஆனில் சொல்லப்படும் அல் முஃமினீன் என்ற பாதையும் அது சஹாபாக்களின் பாதை என்ற விளக்க ஆதாரங்களும்

அல்குர் ஆனில் சொல்லப்படும் அல் முஃமினீன் என்ற பாதையும் அது சஹாபாக்களின் பாதை என்ற விளக்க ஆதாரங்களும்

அஷ்ஷெய்க் யஹ்யா சில்மி பின் முஹம்மது நுபார்.

அன்றைய தினம் இறக்கிய மார்க்கத்தை ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களுடைய ஸஹாபாக்களும் எவ்வாறு பின்பற்றினார்களோ, அவ்வழிமுறையில் எவர்கள் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் “ஜென்னத்” சென்றடைவார்கள். அந்த வழிமுறையினைத் தவிர்ந்து அல்குர்ஆன் அஸ்ஸுன்னா என்று கூறி ஆதாரங்கள் நிருபிக்கிறோம் என்று அல்குர் சுன்னா விடயங்களை காட்டினாலும் அவர்கள் “ஜென்னத்” சென்றடைய மாட்டார்கள் என்பது ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தீர்ப்பாகும்.

இதனையே நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்கு முன்னால் ஒரு நேர்கோட்டினை வரைந்தார். அதன் வலதிலும் இடதிலும் பல கோடுகளை வரைந்தார். தனக்கு முன்னால் வரைந்த நேர்கோட்டில் தனது விரலை வைத்து, சூரத்துல் “அன்ஆம்” இன் 153 வசனத்தை ஓதிக் காட்டினார்.

وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ

” நிச்சயமாக இது நேரானதாக இருக்க என்னுடைய வழியாகும். இதனையே நீங்கள் பின்பற்றங்கள். இன்னும், மற்ற வழிகளைப் பினபற்றாதீர்கள். அவை, அவனுடைய வழியில் இருந்து உங்களைப் பிரித்து விடும் என்ற அல்குர்ஆன் வசனத்தைக் கூறி ஏனைய அனைத்துப் பாதைகளிலும் ஓர் ஷைத்தான் அழைப்பாளராக இருக்கின்றான் என்று எச்சரித்துள்ளார்கள். (முஸ்னத் அஹ்மத்);

ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நேர் பாதையில் ஷைத்தான் அழைப்பாளராக இல்லை. ஆனால் ஏனைய பாதைகளில் ஷைத்தான் அழைப்பாளராக இருந்து மனிதன் நேர்வழியில் செல்வதைத் தடுத்து “ஜென்னத்” சென்றவடைவதைத் தடுக்கின்றான். இதுவே அவர்கள் “நரகம்” சென்றடைவதற்கான காரணமாகும். ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இக்கூற்றினை அல்லாஹ் சுபஹானஹுதாலா அல்குர்ஆனில் பல இடங்களில் நிரூபித்திருக்கின்றான்.

அல்லாஹ் சுபஹானஹுதாலா “சூரத்துல் பகரா”வில் கூறியுள்ளான்:

“فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنتُم بِهِ فَقَدِ اهْتَدَوا

وَّإِن تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ

ۖ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ ”

(விசுவாசம் கொண்டோரே!) நீங்கள் எதை விசுவாசம் கொண்டீர்களோ, அது போன்றதை விசுவாசம் கொண்டுவிட்டால் திட்டமாக அவர்கள் நேர் வழியை அடைந்து விடுவார்கள். இன்னும், அவர்கள் புறக்கணித்துவிட்டால், நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்!) அல்லாஹ் போதுமானவன். (பகரா – 137)

அன்று அல்லாஹ் இவ்வாயத்தினை இறக்கும் போது “அவர்கள் அனைவரும் நேர்வழி பெற்றுக் கொண்டால்” என்று கூறுவது முன்றாமவர்களை ஆகும் – அன்று துன்யாவில் தோற்றம் பெறாதவர்களும், அன்று ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் காணப்படாதவர்களையுமே “ அவர்கள் (அனைத்துக்கூட்டங்களும்)” என்று மூன்றாம்நபர்களை அல்லாஹ் குறிப்பிட்டுக் காட்டியுள்ளான்.

அவர்கள் “فَإِنْ آمَنُوا” - அனைவரும் ஈமானைப் பெற்றுக் கொண்டால்

“ بِمِثْلِ مَا آمَنتُم” எம் முறையில் நீங்கள் ஈமான் பெற்றுக்

கொண்டீர்களோ, “ பி மிஸ்லிமா ஆமன்த ” – நீ ஈமான் பெற்றுக் கொண்டதைப் போன்று என்று ஒருமையில் கூறாமல் மாறாக,

“ بِمِثْلِ مَا آمَنتُم ”

நீங்கள் (நீங்கள் – ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஸஹாபாக்களும்) என்று பன்மையில் கூறியுள்ளான்.

ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் எவ்வழிமுறையில் ஈமான் பெற்றுக் கொண்டார்களோ அவ்வழிமுறையில்

ஈமான் பெற்றுக் கொண்டால் “ فَقَدِ اهْتَدَوا ” – நேர்வழி அடைவீர்கள். அதாவது பின்பற்றும் வழிமுறையில் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஸஹாபாக்களையும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.

அல்லாஹ் சுபஹானஹ{தாலா “சூரத்துல் நிஸா”வில் கூறியுள்ளான்:



وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ

وَيَتَّبِعْ

غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ ۖ

وَسَاءَتْ مَصِيرًا

“ நேரான வழி இன்னதென்று தெளிவான பின்னர் எவர், (நம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து, விசுவாசிகளின் வழியல்லாத(வேறு வழியான)தைப் பின்பற்றுகிறாரோ அவரை நாம், அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம். (பின்னர்) அவரை நரகில் புகுத்திவிடுவோம். அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது. (நிஸா – 115)

“وَمَن يُشَاقِقِ الرَّسُولَ” – எவர்கள் தூதரிடம் இருந்து பிரிந்து

செல்கின்றார்களோ என்று தான் அல்லாஹ் சுபஹானஹுதாலா கூறுகிறானே தவிர , “யுஹாலிபு ரசூல்” என்று அல்லாஹ் கூறவில்லை.

அதாவது “يُشَاقِقِ الرَّسُولَ” என்றே அல்லாஹ் கூறியுள்ளான்.

“யுஹாலிபு ரசூல்” என்றால் ரசூல் சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராகச் செல்கின்றவர்கள். ரசூல் சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எதிரியினைப் பற்றிக் கூறவில்லை. அதாவது , ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிரி காபிராகும்.

ஆனால் “يُشَاقِقِ ” – பிரிந்து செல்பவன் என்ற சொல்லே

பாவிக்கப்பட்டுள்ளது. அரபியில் “ஷக்கத் தியாப்” என்றால் ஆடையினை கிளித்தவர்கள். அதாவது, ஆடை ஒன்றாக இருப்பதனால் தான் , பிரிக்க வேண்டுமெனில் , ஆடையை கிளிப்பார்கள். அவ்வாறே, அருமை ரசூல் சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து இருந்த ஒருவர் தான் அவரிடம் இருந்து பிரிந்து செல்ல முடியும். அதாவது இங்கு “உம்மதி” – ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களைப் பற்றியே பேசப்படுகின்றது. மாறாக, காபிர்களைப் பற்றி அல்ல.

“وَمَن يُشَاقِقِ الرَّسُولَ” யார் தூதரிடம் இருந்து பிரிந்து

செல்கின்றார்களோ அவர்களைப் பற்றியாகும்.

தூதரிடம் இருந்து பிரிந்து செல்வது எப்படி என்றால் , ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறைகளை அறியாமல், அவர்களுடைய வாழ்க்கையினை அறியாமல் தனக்கு தேவையான முறையில் நடை உடை பாவனைகள் அனைத்திலும், ஏனைய கொள்கை சுமந்து வாழ்ந்தால், ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்து பிரிந்து விடுவோம். நபி வழி என்ற வழிமுறையினை அறியாமல் தனக்கு தேவை மாதிரி நடை உடை பாவனை என்று பின்பற்றிக் கொண்டிருப்பவர்கள். எப்பொழுது ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கல்வியினை பெற்றுக் கொள்வார்களோ, அப்பொழுது ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றுவார்கள். அவர்களுடைய அன்றாட காரியங்கள் அனைத்திலும் இன்னும் ஏனைய விடையங்களான குடும்பவாழ்வு, சமூக வாழ்வு அல்லது தனிப்பட்ட விடையங்கள் அனைத்திலும் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிப்படையை பின்பற்றுவார்கள். இவ்வாறு பின்பற்றும் போது அவர்கள் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இணைந்தவர்களாக இருப்பார்கள்.

ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிப்படையை கற்கவில்லை என்றால், துன்யாவில் காணப்படும் ஏதுமொன்றை பின்பற்றி வாழ்வார்கள். அப்பொழுது அவர்கள் இன்னொரு கூட்டத்தினருக்கு உரித்தாகுவார்கள். அப்போது, நிச்சயமாக ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அடிப்படையில் இருந்து பிரிந்து செல்வார்கள். நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஸுன்னாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதே ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்து பிரிந்து செல்வதற்கான காரணமாக அமையும். நபி வழியை விளங்குவதற்கு முயற்சிக்காமல் துன்யாவின் பிற விடையங்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் “கியாமத்” வாழ்வில் துன்யாவில் ஏதோவொரு வாழ்க்கையை வாழ்ந்தவராக , பின்பற்றியவராக வருவார்கள். மறுமை நாளில் வந்து ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றியதாக கூறுவார்கள் . ஆனால், ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி தனது வாழ்க்கையினை வாழ்தவர்கள் அல்ல.

ஏனென்றால் அவர்களுடைய ஆடையில், குடும்பவாழ்க்கையில், கொள்கைகையில் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவைகளை எம்முறையில் முன்மாதிரியாக செயல்படுத்தினார்களோ , அம்முன்மாதிரிகளை அவ்வழிமுறையில் அவர்கள் பின்பற்றவில்லை. எனவே, ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்து பிரிந்தவர்களாகவே காணப்படுவார்கள்.

இதுவே “ يُشَاقِقِ الرَّسُولَ ” ஆகும்.

“ يُشَاقِقِ الرَّسُولَ” – எவர் தூதரிடமிருந்து பிரிந்து செல்கின்றார்களோ,

மேலும், இஸ்லாமிய உம்மத்தில் உள்ள அனைவருக்கும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்மாதிரியாக எடுக்கும்படி அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் சத்தியம் இருக்கின்றதா ? , என்று இஸ்லாமிய உம்மத் சந்தேகம் கொள்ளாத ஓர் விடயம் ஆகும். அவைகளில் சத்தியம் உள்ளதென்று அனைத்து உள்ளங்களும் அறிந்த ஓர் உண்மை. அவைகளைப் பெற்றுக் கொண்டு நாம் பின்பற்ற வேண்டும். இதனைத்தான்

“مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ”– அவர்களுக்கு ஹிதாயத்ததை தெளிவு காட்டிய பின்னர், அதில் அவர்கள் கவனமில்லாமல் இருக்கின்றார்கள்;.

“وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ” –“ الْمُؤْمِنِينَ “ என்ற பாதையைத் தவிர்ந்து ஏனைய பாதைகளைப் பின்பற்றினால்,

(இந்த ஆயத் இறக்கப்பட்ட போது காணப்பட்ட “الْمُؤْمِنِينَ ” கள் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் ஆவார்கள் அவர்களைத் தவிர வேறு எவரும் “الْمُؤْمِنِينَ” என்று அக்கலத்தில்

இருக்கவில்லை)அதாவது, எவரெல்லாம் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் , சஹாபாக்களும் இருந்த பாதைளைத் தவிர்ந்து வேறு பாதையில் சென்றால்

“ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ”அவர்கள் எப்பாதையினை நோக்கிச் செல்கின்றார்களோ அப்பாதையிலேயே செல்வதற்கு அவர்களை விட்டு விடுவோம்.

உதாரணத்திற்கு, ஒருவன் சூபியாவதற்கு ஆசைப்பட்டால் அவனை அதே பாதையில் செல்வதற்கு விட்டுவிடுவான். இன்னொருவன், அல்லாஹ்விடம் தர்க்கவாதியாகி ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அஹாதிஸ்களுடன் மோதுவதற்கு நாடுகின்றான், மேலும் இன்னொருவன் இச்சையுடன் வாழ்வதற்கு அல்லது அல்லாஹ்வை நிராகரிப்பதற்கு நாடுகின்றான் என்றால் அப்போது

“ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ” –அவர்கள் எதை நோக்கி நாடுகின்றார்களோ அதை நோக்கிச் செல்ல விட்டுவிடுவான்.

“ وَنُصْلِهِ جَهَنَّمَ”ஆனால் அவர்கள் சென்றடையும் இடம் நரகமாகும். ஏனென்றால் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் பின்பற்றிய பாதையைப் பின்பற்றாமல் வேறு பதைகளைப் பின்பற்றியதால்

“وَسَاءَتْ مَصِيرًا”அவர்கள்; சென்றடையும் இடம் மிகக் கெட்டது.

மேற்கூறப்பட்டவைகளை அல்லாஹ் சுபஹானஹுதாலா “சூரத்துல் நிஸா – 115ஆவது ஆயத்தில்” குறிப்பிட்டுள்ளான். “ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் பின்பற்றாத பாதையினைப் பின்பற்றினால் அவர்கள் நரகத்தை சென்றடைவார்கள் ” என்ற கூற்றினையே மேற்கூறப்பட்ட ஆயத்துக்கள் எடுத்து இயம்புகின்றது.

இது ஷேக் யஹ்யா சில்மி அவர்களின் உசூழுத் தஃவா சலபிய்யா என்ற வகுப்பின் ஒரு பகுதியின் எழுத்து வடிவம்.
எழுத்தாக தந்தவர் உம்மு ருசைக்.